திங்கள், 18 ஜூலை, 2011

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எயிதுவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.

அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும், ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.

இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.

அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசனாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்ட தென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.

கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.

கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.

பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.

தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.

காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரிய வில்லை.


இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திர்க்கு உள்ளாக்கியது.

தன்னுடைய அடிமைத் தலையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.

சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம்?. வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.

அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோர்ரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.

திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.

சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.

இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவா ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.


நன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.





வியாழன், 7 ஜூலை, 2011

ரெய்னீஸ் அய்யர் தெரு- வண்ண நிலவன்- கிழக்கு பதிப்பகம்





எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் ரெய்னீஸ் அய்யர் தெரு, தலைமுறைகள் தாண்டி போற்றப் படக் கூடிய ஒரு சிறந்த படைப்பு.(நாவல்)
அந்தக் கதையில் களமாக வரும் ரெய்னீஸ் அய்யர் தெரு, பாளையம்கோட்டை காளிமார்க் (இப்போது அரசன் கூல் பார்)பேருந்து நிறுத்தத்தின் அருகில் என்று தெரிந்ததும், அதைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

எனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக மிகச் சிறந்த , ஜீவன் நிரம்பிய தெருவாகத்தான் இருக்கிறது.

கம்பனின் அயோத்தியை, ராமேஸ்வரத்தை, வியாசரின் மதுராவை கண்ட உடன் வாசகர் எவ்வாறு மகிழ்ச்சி அடைவாரோ, அதே உணர்வை இந்தத் தெருவை தொட்டதும் நான் அடைந்தேன்.

வாசகர்களும் கண்டுகளிக்க உணர , இந்தப் படங்களைப் பதிவு செய்கிறேன்.
தொடர்புடைய பதிவு


.

வண்ணதாசன் மற்றும் வண்ண நிலவன் படித்த பள்ளிக்கூடம்





தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் வண்ணதாசன் மற்றும் வண்ண நிலவன் படித்த பள்ளிக்கூடம், நெல்லை நகர தெற்குப் புதுத் தெருவில் இருக்கும் சாப்ப்டர் கிளைப் பள்ளிக்கூடம் , என்ற தகவல் பவுத்த அய்யனாரின் நேர்காணலில் வண்ண நிலவன் தெரிவித்து இருந்தார்.

நான் அந்தப் பகுதி வழியாக பலமுறை நடந்து சென்றுள்ளேன் என்ற எண்ணத்தால், அந்தப் பள்ளிக்கூடத்தை புகைப்படம் எடுத்து பதிவிட ஆசை வந்தது. எனவே புகைப்படம் எடுத்து பதிவு இட்டுள்ளேன்.

தமிழ் வாசகர்கள் இதைப் பார்த்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .

பாரதி, வவுசி , அண்ணாதுரை போன்றோர் படித்த பள்ளிகளை காலம் கடந்து போற்றுகிறோம், அவ்வாறு ஒரு நிலை இனி ஏற்பட வேண்டாம் என்ற எண்ணமும் உண்டு.

முக நூலில் , நண்பர் சோமசுந்தரம் (அமெரிக்கா வாழ் தமிழர்) தெரிவித்த தகவல், இப்பள்ளியில் தான் , சமகாலக் கவிஞர் கலாப்ரியா அவர்களும் படித்தார்.

புதன், 6 ஜூலை, 2011

வண்ண நிலவனின் கம்பா நதி- குறுநாவல்- கிழக்கு பதிப்பகம்- படங்கள்







கம்பாநதி முதல் பத்தி இவ்வாறு செல்லும்.
சங்கரன் பிள்ளையும் சூரியும் தெற்குப் புதுத் தெருவில், வாகையடி முக்குத் திருப்பத்தில் திரும்பும்போது மணி நள்ளிரவு இரண்டைத் தாண்டி விட்டது.

வாகையடி முக்கு, தெற்குப் புதுத் தெரு படங்கள்





பக்கம் 64 இல் வரும் சங்கரன் பிள்ளை , சூரி, திருநாவுக்கரசு சீட்டாடும் காட்சி மண்டபம், படங்கள்



மேலும் படங்கள் வரும் பதிவுகளில்

சனி, 14 மே, 2011

மதுமிதா அவர்களின் - இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவுமும்

'அன்னா கரீனினாவை வாசித்த பின், அன்னாவின் வாழ்க்கை பெண்ணின் மன நிலையைப் புரிந்து கொள்ளச் செய்ததும், ஜெயகாந்தனின் 'பாரிசுக்குபோ'வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் வாசிப்பினை அதிகரித்தது.

வெண்ணிற இரவுகளில் ஏழு இரவுகளும் உடன் நடந்து நீ ஏன் முதலில் வரவில்லை , உன்னை மணந்து இருப்பேனே என்னும் கேள்வி பல இரவுகள் விழிப்பினை ஏற்படுத்தியது.

பலி, பிரகாசமான விளக்குகளுடன் ஒரு அறை போன்ற சிறுகதைகள் இன்னொரு தளத்துக்குச் சென்று என்னை சிந்திக்க வைத்தன.

அழிவற்ற காதல், வால்காவிலிருந்து கங்கை வரை, தர்மானந்த கோசம்பியின் தத்துவ இயல்கள் ... என வாசிப்பு விரிய விரிய
புது உலகைக் காண்பதும், சந்திக்கும் மனிதர்களுடன் இன்னும் நேசமாய்ப் பூப்பதும் இயல்பாய் நிகழ்கிறது - மதுமிதா


இரவு பற்றி சமகால எழுத்தாளர்கள், பதிவர்கள் பலர் தங்கள் அனுபவங்களை, பார்வைகளை மிக அழகாக எழுதி இருக்கிறார்கள். பல்வேறு வித கட்டுரையாளர்களை ஒருங்கே இணைத்து ஒரு அற்புதமான படைப்பைத் தந்து உள்ள எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கும் சந்தியா பதிப்பகம் மற்றும் குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

படைப்பை அளித்துள்ள கட்டுரையாளர்கள்- கலா ப்ரியா, தமிழ்நதி, ரிஷான் ஷெரிப், நாஞ்சில் நாடன், மதுமிதா , பாஸ்கர் சக்தி, எ முத்துலிங்கம், யுகமாயினி சித்தன், உமா ஷக்தி, கவின் மலர், லதா ராமகிருஷ்ணன், அசோக மித்திரன், ந தேவி, கோ மா கோதண்டம், வைதீஸ்வரன், க மோகன ரங்கன், தி சுபாஷினி , ச விஜய லட்சுமி , ராஜ்ஜா , இந்திரா பார்த்தசாரதி, பாவண்ணன், சக்திஜோதி, நரசய்யா, இளம்பிறை, எஸ் ஷங்கர நாராயணன், இரா முருகன், அரங்க மல்லிகா, தமிழ்மகன், பூ அ இரவீந்திரன், ஜெயந்தி சங்கர், ஆல்பர்ட்,சேவியர், ராமச்சந்திரன் உஷா, நாகரத்தினம் கிருஷ்ணா, தமிழ்ச்செல்வன், அண்ணாமலை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
0091 44 24896979
www.sandhyapublications.com

எனக்கு தோன்றும் ஒரே குறை- பெரும்பாலான கட்டுரைகள் சோக நிகழ்வுகளையே அடக்கி இருக்கின்றன. இதே இரவு குறித்து எ ஆர் ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ், சின்மயி எழுதி இருந்தால் மகிழ்ச்சி கலந்த அனுபவங்களை எழுதி இருப்பர் என எண்ணுகிறேன்.
ஸ்ரீனிவாஸ் சொன்னார் கிழக்கு சீமையிலே , உயிரே பாடல் பதிவுகள் இரவுகளில் நடந்தன. அளவிலா இன்பம் நிறைந்த இரவுகள் அவை என்றார். அதில் எப்படி சந்தேகம் வரும் நமக்கு.

எழுத்தாளர் மதுமிதா அவர்களின் காலம் பற்றிய புத்தகம் இன்று வாசித்து முடித்து விடுவேன். அது பற்றி அடுத்த பதிவு இட ஆவலாக உள்ளேன்

செவ்வாய், 3 மே, 2011

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் இன்று ஒரு இலக்கியத் திருவிழா நடந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

பதிவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அகநாழிகை வாசுதேவன், மணிஜி, உமா ஷக்தி, மதுமிதா ராஜா, கிருஷ்ணா பிரபு, அதியமான், வெங்கட், ப்ரியா ராஜ், அழகிய பெரியவன், இந்திரா பார்த்தசாரதி, எறும்பு ராஜகோபால், மர்.டின் அதிஷா, யுவ கிருஷ்ணா, விஜய் மகேந்திரன், மனுஷ்ய புத்திரன், சந்தியா பதிப்பகம் ராஜகோபால், எஸ் ராமகிருஷ்ணன், வண்ணதாசன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எங்கள் ஊர் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

அவருக்கு சுஜாதா உயிர்மை விருது கிடைத்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

சனி, 30 ஏப்ரல், 2011

எழுத்தாளர் ஜெயமோகனுடன் நான் - புகைப்படம்



வேங்கட சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இனிதே நடை பெற்றது.
அவ்விழா துவங்கும் முன்னர் நான் எழுத்தாளர் ஜெயமோகனுடன், பதிவர் டோண்டு, எழுத்தாளர் ப்ரியா ராஜ் (அலிடாலியா ராஜாமணி) ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள்.


இவ்விழாவில் சிறிது நேரம், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருக்கும் மாபெரும் பாக்கியம் கிடைத்தது.

வண்ண நிலவனுடன் அருகில் நின்று புகைப் படம் எடுக்கும் அளவிற்கு இன்னும் வாசிக்க வில்லை என்பதால், அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வில்லை நான்



சனி, 26 பிப்ரவரி, 2011

தஞ்சை பிரகாஷ் படைப்புகள் குறித்து விக்ரமாதித்யன்











தஞ்சை பிரகாஷின் படைப்புகள் குறித்து விக்ரமாதித்யன் எழுதிய கருத்துக்கள் ,
.
நண்பர்களுக்காக

மன்னிக்கவும், பக்கங்களை இணைக்கும் பொழுது வரிசையாக ஒழுங்காக இணைக்க வில்லை, எனவே பக்க எண் படி வாசிக்க வேண்டுகிறேன்
(126 to 141)
புத்தகம் பெயர்- தன்மை, முன்னிலை படர்க்கை
வெளியீடு- சந்தியா பதிப்பகம்
விலை - 90
Tel: 00 91 44 24896979
www.sandhyapublications.com

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வாசித்தலுக்கு எஸ் ராமகிருஷ்ணன் அளிக்கும் அறிவுரைகள்.

வருடத்திற்கு / மாதத்திற்கு/வாரத்திற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை என பட்டியல் இட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப கால வாசகர்கள், வருடத்திற்கு இருபது புத்தகங்கள் (குறைந்த பட்சம்) படித்தாலே , வாசித்தலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
(எஸ் ரா - வாரத்திற்கு ஐம்பது முதல் அறுபது புத்தகங்களை வாசித்து வருகிறார்)

புத்தகம் வாசித்தல் நம் மனதை, எண்ணங்களை, நம் பார்வையை விரிவு படுத்தும். நம் எண்ணங்கள் விசாலம் அடையும். நம்மிடம் உள்ள அழுக்கு
நிறைந்த எண்ணங்களை வாசித்தல் வெளியேற்றி விடும்.
நமது ஆளுமையை மேம்படுத்தும், பிற மனிதர்களுடன்
பழகுவதற்கு வாசித்தல் உதவி புரியும். எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் சந்திக்கும் நம்பிக்கையை வாசித்தல் நமக்கு அளிக்கும்.

சமீபத்திய புத்தக கண்காட்சியில் நிறைய வாசகர்கள் புத்தகம் வாங்கி யுள்ளனர். அவர்கள் அனைவரும் அதை முழுதும் வாசித்து முடிக்க வேண்டும். வாசித்த படி நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

வாசித்து முடித்த புத்தகங்களை வீட்டில் வைக்க இடம் இல்லாததால், அவர் பல புத்தகங்களை நண்பர்களுக்கு, நூலகங்களுக்கு, கிராமப் புற பள்ளிகளுக்கு கொடுத்து விடுகிறாராம். இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்ற தொடங்கலாம்.

சென்னை கன்னிமரா உணவகம் உள்புறம் (அருகில்) ஒரு பெண்மணி வைத்து இருக்கும் புத்தக கடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பெண்மணி (உரிமையாளர்) அந்தக் கடையில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றியும் விளக்கம் அழைப்பர், அதனுடன் தொடர்பு உடைய புத்தகங்கள் குறித்தும் தகவல் அளிப்பார்.


அபிதாம சிந்தாமணி புத்தகம் உருவாகிய காலத்தில் தட்ட்டச்சு, கணினி வசதிகள் கிடையாது. அந்த கால கட்டத்தில் ஒரு ஆசிரியர் பென்சிலின் உதவியால் முப்பதாயிரதிர்க்கும் மேலாக புதிய தமிழ் சொற்களை அந்த நூலில் அறிமுகம் செய்துள்ள ஒரு அறிய, பாராட்டுதலுக்கு உரிய புத்தகம் அது. அதிலும் குறிப்பாக அறிவியல் குறித்த தகவல்கள், சொற்கள் ஏராளம். எனவே தான் , தான் அந்த நூலிற்கு வாசிப்பதில் முதல் இடம்/முன்னுரிமை அளித்ததாக அவர் கூறியது, மிகவும் பொருத்தமே.


நேற்று எஸ் ராமகிருஷ்ணன் பங்கு பெற்ற ஆண்டான் செகா விழாவில் , விழா துவங்கும் முன்பு அவர் கூறிய கருத்துக்கள் இவை..