சனி, 14 மே, 2011

மதுமிதா அவர்களின் - இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவுமும்

'அன்னா கரீனினாவை வாசித்த பின், அன்னாவின் வாழ்க்கை பெண்ணின் மன நிலையைப் புரிந்து கொள்ளச் செய்ததும், ஜெயகாந்தனின் 'பாரிசுக்குபோ'வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் வாசிப்பினை அதிகரித்தது.

வெண்ணிற இரவுகளில் ஏழு இரவுகளும் உடன் நடந்து நீ ஏன் முதலில் வரவில்லை , உன்னை மணந்து இருப்பேனே என்னும் கேள்வி பல இரவுகள் விழிப்பினை ஏற்படுத்தியது.

பலி, பிரகாசமான விளக்குகளுடன் ஒரு அறை போன்ற சிறுகதைகள் இன்னொரு தளத்துக்குச் சென்று என்னை சிந்திக்க வைத்தன.

அழிவற்ற காதல், வால்காவிலிருந்து கங்கை வரை, தர்மானந்த கோசம்பியின் தத்துவ இயல்கள் ... என வாசிப்பு விரிய விரிய
புது உலகைக் காண்பதும், சந்திக்கும் மனிதர்களுடன் இன்னும் நேசமாய்ப் பூப்பதும் இயல்பாய் நிகழ்கிறது - மதுமிதா


இரவு பற்றி சமகால எழுத்தாளர்கள், பதிவர்கள் பலர் தங்கள் அனுபவங்களை, பார்வைகளை மிக அழகாக எழுதி இருக்கிறார்கள். பல்வேறு வித கட்டுரையாளர்களை ஒருங்கே இணைத்து ஒரு அற்புதமான படைப்பைத் தந்து உள்ள எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கும் சந்தியா பதிப்பகம் மற்றும் குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

படைப்பை அளித்துள்ள கட்டுரையாளர்கள்- கலா ப்ரியா, தமிழ்நதி, ரிஷான் ஷெரிப், நாஞ்சில் நாடன், மதுமிதா , பாஸ்கர் சக்தி, எ முத்துலிங்கம், யுகமாயினி சித்தன், உமா ஷக்தி, கவின் மலர், லதா ராமகிருஷ்ணன், அசோக மித்திரன், ந தேவி, கோ மா கோதண்டம், வைதீஸ்வரன், க மோகன ரங்கன், தி சுபாஷினி , ச விஜய லட்சுமி , ராஜ்ஜா , இந்திரா பார்த்தசாரதி, பாவண்ணன், சக்திஜோதி, நரசய்யா, இளம்பிறை, எஸ் ஷங்கர நாராயணன், இரா முருகன், அரங்க மல்லிகா, தமிழ்மகன், பூ அ இரவீந்திரன், ஜெயந்தி சங்கர், ஆல்பர்ட்,சேவியர், ராமச்சந்திரன் உஷா, நாகரத்தினம் கிருஷ்ணா, தமிழ்ச்செல்வன், அண்ணாமலை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
0091 44 24896979
www.sandhyapublications.com

எனக்கு தோன்றும் ஒரே குறை- பெரும்பாலான கட்டுரைகள் சோக நிகழ்வுகளையே அடக்கி இருக்கின்றன. இதே இரவு குறித்து எ ஆர் ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ், சின்மயி எழுதி இருந்தால் மகிழ்ச்சி கலந்த அனுபவங்களை எழுதி இருப்பர் என எண்ணுகிறேன்.
ஸ்ரீனிவாஸ் சொன்னார் கிழக்கு சீமையிலே , உயிரே பாடல் பதிவுகள் இரவுகளில் நடந்தன. அளவிலா இன்பம் நிறைந்த இரவுகள் அவை என்றார். அதில் எப்படி சந்தேகம் வரும் நமக்கு.

எழுத்தாளர் மதுமிதா அவர்களின் காலம் பற்றிய புத்தகம் இன்று வாசித்து முடித்து விடுவேன். அது பற்றி அடுத்த பதிவு இட ஆவலாக உள்ளேன்

செவ்வாய், 3 மே, 2011

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் இன்று ஒரு இலக்கியத் திருவிழா நடந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

பதிவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அகநாழிகை வாசுதேவன், மணிஜி, உமா ஷக்தி, மதுமிதா ராஜா, கிருஷ்ணா பிரபு, அதியமான், வெங்கட், ப்ரியா ராஜ், அழகிய பெரியவன், இந்திரா பார்த்தசாரதி, எறும்பு ராஜகோபால், மர்.டின் அதிஷா, யுவ கிருஷ்ணா, விஜய் மகேந்திரன், மனுஷ்ய புத்திரன், சந்தியா பதிப்பகம் ராஜகோபால், எஸ் ராமகிருஷ்ணன், வண்ணதாசன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எங்கள் ஊர் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

அவருக்கு சுஜாதா உயிர்மை விருது கிடைத்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

சனி, 30 ஏப்ரல், 2011

எழுத்தாளர் ஜெயமோகனுடன் நான் - புகைப்படம்



வேங்கட சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இனிதே நடை பெற்றது.
அவ்விழா துவங்கும் முன்னர் நான் எழுத்தாளர் ஜெயமோகனுடன், பதிவர் டோண்டு, எழுத்தாளர் ப்ரியா ராஜ் (அலிடாலியா ராஜாமணி) ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள்.


இவ்விழாவில் சிறிது நேரம், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருக்கும் மாபெரும் பாக்கியம் கிடைத்தது.

வண்ண நிலவனுடன் அருகில் நின்று புகைப் படம் எடுக்கும் அளவிற்கு இன்னும் வாசிக்க வில்லை என்பதால், அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வில்லை நான்



சனி, 26 பிப்ரவரி, 2011

தஞ்சை பிரகாஷ் படைப்புகள் குறித்து விக்ரமாதித்யன்











தஞ்சை பிரகாஷின் படைப்புகள் குறித்து விக்ரமாதித்யன் எழுதிய கருத்துக்கள் ,
.
நண்பர்களுக்காக

மன்னிக்கவும், பக்கங்களை இணைக்கும் பொழுது வரிசையாக ஒழுங்காக இணைக்க வில்லை, எனவே பக்க எண் படி வாசிக்க வேண்டுகிறேன்
(126 to 141)
புத்தகம் பெயர்- தன்மை, முன்னிலை படர்க்கை
வெளியீடு- சந்தியா பதிப்பகம்
விலை - 90
Tel: 00 91 44 24896979
www.sandhyapublications.com

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வாசித்தலுக்கு எஸ் ராமகிருஷ்ணன் அளிக்கும் அறிவுரைகள்.

வருடத்திற்கு / மாதத்திற்கு/வாரத்திற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை என பட்டியல் இட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப கால வாசகர்கள், வருடத்திற்கு இருபது புத்தகங்கள் (குறைந்த பட்சம்) படித்தாலே , வாசித்தலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
(எஸ் ரா - வாரத்திற்கு ஐம்பது முதல் அறுபது புத்தகங்களை வாசித்து வருகிறார்)

புத்தகம் வாசித்தல் நம் மனதை, எண்ணங்களை, நம் பார்வையை விரிவு படுத்தும். நம் எண்ணங்கள் விசாலம் அடையும். நம்மிடம் உள்ள அழுக்கு
நிறைந்த எண்ணங்களை வாசித்தல் வெளியேற்றி விடும்.
நமது ஆளுமையை மேம்படுத்தும், பிற மனிதர்களுடன்
பழகுவதற்கு வாசித்தல் உதவி புரியும். எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் சந்திக்கும் நம்பிக்கையை வாசித்தல் நமக்கு அளிக்கும்.

சமீபத்திய புத்தக கண்காட்சியில் நிறைய வாசகர்கள் புத்தகம் வாங்கி யுள்ளனர். அவர்கள் அனைவரும் அதை முழுதும் வாசித்து முடிக்க வேண்டும். வாசித்த படி நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

வாசித்து முடித்த புத்தகங்களை வீட்டில் வைக்க இடம் இல்லாததால், அவர் பல புத்தகங்களை நண்பர்களுக்கு, நூலகங்களுக்கு, கிராமப் புற பள்ளிகளுக்கு கொடுத்து விடுகிறாராம். இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்ற தொடங்கலாம்.

சென்னை கன்னிமரா உணவகம் உள்புறம் (அருகில்) ஒரு பெண்மணி வைத்து இருக்கும் புத்தக கடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பெண்மணி (உரிமையாளர்) அந்தக் கடையில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றியும் விளக்கம் அழைப்பர், அதனுடன் தொடர்பு உடைய புத்தகங்கள் குறித்தும் தகவல் அளிப்பார்.


அபிதாம சிந்தாமணி புத்தகம் உருவாகிய காலத்தில் தட்ட்டச்சு, கணினி வசதிகள் கிடையாது. அந்த கால கட்டத்தில் ஒரு ஆசிரியர் பென்சிலின் உதவியால் முப்பதாயிரதிர்க்கும் மேலாக புதிய தமிழ் சொற்களை அந்த நூலில் அறிமுகம் செய்துள்ள ஒரு அறிய, பாராட்டுதலுக்கு உரிய புத்தகம் அது. அதிலும் குறிப்பாக அறிவியல் குறித்த தகவல்கள், சொற்கள் ஏராளம். எனவே தான் , தான் அந்த நூலிற்கு வாசிப்பதில் முதல் இடம்/முன்னுரிமை அளித்ததாக அவர் கூறியது, மிகவும் பொருத்தமே.


நேற்று எஸ் ராமகிருஷ்ணன் பங்கு பெற்ற ஆண்டான் செகா விழாவில் , விழா துவங்கும் முன்பு அவர் கூறிய கருத்துக்கள் இவை..

புதன், 22 டிசம்பர், 2010

வண்ணதாசனின் ஒளியிலே தெரிவது

வெளியீடு- சந்தியா பதிப்பகம் சென்னை . 0091 44 24896979
கிடைக்குமிடம்-நியு புக் லேன்ட் தி நகர்
0091 44 28158171, 28156006
விலை- ரூ- 100 . http://www.sandhyapublications.com/

மிக அற்புதமான பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். சிநேகிதிகள், இமயமலையும் அரபிக்கடலும், சில ராஜா ராணி கப்பல்கள், யாரும் இழுக்காமல் தான (நெல்லை தேர், நெல்லைஅப்பர் கோயில் தேர் அல்ல)), ஒரு கூழாங்கல், சுலோச்சனா அதை, ஜெகதா, காணாமல் போகும் வாய்க்கால்கள், ஒரு போதும் தேயாத பென்சில், ஒளியிலே தெரிவது, இன்னொன்றும், துரு, மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை.

உயிரெழுத்து, சிக்கிமுக்கி, திரிசக்தி போன்ற இனைய இதழ்களில் வந்த சிறுகதைகள் இவை.

எனக்கு பிடித்த சில வரிகள் (நெல்லை, பாளை சார்ந்த வாசகர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பிடிக்கும், வட்டார மொழியில், வட்டார பழக்க வழக்கங்களை அருமையாக எழுதி உள்ளார் வண்ண தாசன்).


ஆண்களின் சட்டை அணிந்த கட்டிடத் தொழிலாளிப் பெண்களுக்கும் சைக்கிள் தேநீர்க்காரருக்கும் நடக்கும் வெளிப்படையான உரையாடலை உறிஞ்சிய ஈரத்துடன்தான், எதிர் வீட்டுச் செங்கல் கட்டுமானம் வளர்கிறது.

இருபத்து நான்கு தசரா சப்பரம் இன்றைக்கும் பாளை மார்க்கட்டில் கூடியிருக்கிறது.

விடியக் கருக்கலில் பூத்தான் முக்கில், இன்னும் அரைக்கீரை, முளைக்கீரை, தன்டங்க்கீரை விற்றுகும் சத்தம் கேட்கிறது.

எப்போதும் தாடி வைத்திருக்கிற கூரியர் முத்துக்குமார், ' என்ன சார் தாடி
வளக்கறீங்க உடம்புக்கு சுவமில்லையா ? என்று அக்கறையுடன் கேட்பது இன்னும் அருகிப் போய்விடவில்லை.
திருச்செந்தூர் ரயில் இன்னும் போய்க் கொண்டுதான் இருக்கிறது.




நாற்பது வருடம் கழித்து பார்க்கும் நாச்சியார் பற்றிய வரிகள்.

அடப்பாவி, எப்படி இருப்பாள் ஒரு காலத்தில் தெருவே அல்லவா அவளால் குலுங்கிக் கிடந்தது.
(டவுன் , அம்பிகா காபி அம்பிகாவிர்க்காக தெற்கு ரத வீதி முதல் பாளை பஸ் ஸ்டாண்ட்,
அரசு பொறியியல் கல்லூரி வரை குலுங்கி கிடந்ததயும் கண் முன்னே கொண்டு வந்த வரிகள்)

பீடி பிடித்தாலும் ஒரு தேங்காய் சிரட்டையை பக்கத்தில் வைத்துக் கொள்வார். (சரஸ்வதி லாட்ஜில் பாரா, பொதுக்குழு உறுப்பினர், பரமசிவம், அண்ணாச்சி ஆவுடைஅப்பன்(சபாநாயகர்), பாம்புகரிட்டிணன், சுப்புரதனம், நம்பி போன்றோர் கூடி இருந்த அறையில் இருக்கும் சிரட்டை ஞாபகம் வந்தது).


கல்லூரிகளுக்கு இந்த மாதிரி
ஆர்ச்சு வைத்து கட்ட வேண்ட வேண்டும் என்று முதலில் யார் தீர்மானித்தார்களோ. (புனித சவேரியார், வளனார் கல்லூரிகள்)

எப்படி இந்தக் கல்லத்தி முடுக்கு தெருவுக்குள் இருந்து கொண்டே அம்மா எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறாளோ.


நான் கற்ற விஷயம் : கிடைத்த பொழுதை/சூழலை/நுணுக்கங்களை/வாழ்க்கையை/சொந்தங்களை ரசிக்க வேண்டும், இன்புற வேண்டும். இன்பம் எப்போதும் இருக்கும் . அது இல்லையே இது இல்லையே என்று புலம்பல் கூடாது.



ஓரத்தில் முளைத்துக் கிடந்த
எருக்கலம் பூவை விட உலகத்தில் அழகாக கருநீலம் இருக்க முடியாது என்று தோன்றியது.
இதே ரீதியில் நாம் சொல்வதானால் வண்ணதாசனின் எழுத்தில் வாழும் நெல்லை நகர ரத வீதிகளை விட லண்டன் பிகால்டி தெரு, டைம்ஸ் ஸ்கொயர் 42 ஆம் தெரு, துபாய் ஷேக் சைய்யது தெரு, மாம்பலம் பிருந்தாவன் தெரு ஆகிய தெருக்கள் அழகாய் இருக்க முடியாது என்பதே உண்மை.